இலங்கை
‘பார் கொத்தணியால் மயானம் நோக்கி நாடு! – ராதாகிருஸ்ணன் விளாசல்
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும் .
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு மிகப்பெரிய விளைவை சந்திக்கவுள்ளது.
நாட்டு மக்களை கொரோனா அரக்கனிடம் பலி கொடுக்க அரசு தயாராகிவிட்டது.
ஊரடங்கை அடுத்த மாதம் வரை நீடித்து திடீரென மதுபானசாலைகளை திறந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரசு.
அனைத்து நகரங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை பெறுகின்றனர். இதன் தாக்கம் இன்னும் சில நாள்களில் தெரியவரும்
அத்தியாவசிய பொருள்களை வாங்க சென்றவர்களை அடித்து துரத்தும் சுகாதாரத் தரப்பினர் இன்று மதுபான போத்தல்களை வாங்கும்போது வேடிக்கை பார்த்து கை கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.
இன்னும் சில நாள்களில் பார் கொத்தணி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக மாற்ற அரசு எத்தணிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login