இந்தியா
குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ராகுல் காந்தி
இந்தியா லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக, இந்தியக் குடியரசுத் தலைவரை, நேரில் சந்தித்து ராகுல் காந்தி மனு அளிக்கவுள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரி கேரியில, கடந்த வாரம் வன்முறை இடம்பெற்றிருந்தது.
விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தையடுத்து 8 பேர் உயிரிழந்திருந்தனர்.
இச்சம்பவத்தில் விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என, விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர்.
ஆனால் சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியிருந்தார்.
இந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதேவேளை, பஞ்சாப் முதல்வர் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பாகல் ஆகியோர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இவையும் தொடர்ந்து பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தன.
அத்துடன் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரியங்கா காந்தி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் லக்கிம்பூர் வன்முறை வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login