செய்திகள்

சருமத்தை வெண்மையாக்க க்ரீம்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

Published

on

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை அதிகளவில் பயன்படுத்துவதால் நரம்புகளை பாதிக்கும் நோய்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஆனந்த ஜெயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளையாக்கும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு இந்நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் வலுவாக இல்லை எனவும், இதனால் இந்த வர்த்தகம் மிக இலகுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் படி, அழகுசாதன கிரீம்கள் மற்றும் திரவங்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு 01 கிலோவிற்கு 01 மி.கி. ஆகும்.

இருப்பினும் முன்னெடுக்கப்பட்ட சோதனை முடிவுகளின்படி, தோல்களை வெண்மையாக்கும் கிரீம்களில் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் இருப்பதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.

மேற்படி க்ரீம்களைப் பயன்படுத்துவதால், சருமம் மெலிவதுடன், பார்வைக் குறைபாடும் ஏற்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியான வெள்ளையாக்கும் க்ரீம்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இணையத்தின் ஊடாக முகம் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version