இந்தியா
திமிங்கலம் வடிவிலான விமானம் சென்னையில்!
மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் பெலுகா விமானம், முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.
நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு, ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான அலுவலகம், பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணியர் விமானம் உட்பட, சரக்கு விமானங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்கள் என, 47 ஆயிரம் கிலோ வரை ஏற்றிச் செல்லும் வகையில், திமிங்கலம் வடிவிலான ‘சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர்’ என்ற பெலுகா சரக்கு விமானத்தை, 1995ல் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த விமானம், முதல் முதலாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து, சென்னைக்கு நேற்று காலை எரிபொருள் நிரப்ப வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை.எரிபொருள் நிரப்பிய பின், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் முக்கிய நகரான பட்டாயாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
You must be logged in to post a comment Login