செய்திகள்
அடுத்த வாரம் டில்லி பறக்கின்றார் பஸில்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியா பயணிக்கவுள்ளார் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள ஒரு மில்லியன் டொலர் ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.
இயலுமான அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில், நிதி அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டது.
இதனிடையே, கடன் மறுசீரமைப்பு மற்றும் டொலர் பற்றாக்குறையை முகாமைத்துவப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது என ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்தப் பேச்சுகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login