செய்திகள்
நாட்டின் பொருளாதாரத்தில் எப்போதும் மலையக பெண்களின் பங்களிப்பு அளப்பரியது! – வேலுகுமார் எம்.பி
” ஆடைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்பவற்றின் ஊடாக இந்நாட்டுக்கு டொலர்கள் வருவதற்கு முன்னர், எமது மலையக தாய்மாரே டொலர் வருமானத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், இந்நாடும், அரசுகளும் அவர்களுக்கு இன்னமும் உரிய பரிகாரத்தை வழங்கவில்லை” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வதேச மகளிர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. சுதந்திரத்துக்கு முன்னரும் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மலையக பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆடைத்தொழிற்சாலை மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றிலிருந்து இந்நாட்டுக்கு டொலர் வருவதற்கு முன்னர், இந்நாட்டுக்கு டொலர்களை உழைத்து தந்தது எமது மலையக தாய்மார், சகோதரிகளே. இந்நாட்டின் பொருளாதாரத்துக்காக இரத்தம் சிந்திய அவர்களுக்கு இந்நாடு மற்றும் அரசுகள் என்ன செய்துள்ளன? தொழில் இடங்களில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள்கூட இல்லை.
அதேவேளை, இன்று சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கியது யார்? அரசின் முறையற்ற கொள்கை மற்றும் தெளிவற்ற பொருளாதாரம் காரணமாகவே நாட்டில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிக்கப்பட்டு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.
எனவே, பொருட்களுக்கான தட்டுப்பாடு, கறுப்புச்சந்தை, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அதற்கு பெண்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.
You must be logged in to post a comment Login