செய்திகள்
ஹட்டனிலும் கையெழுத்து வேட்டை! – பெருமளவு மக்கள் அணிதிரள்வு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை ஹட்டனிலும் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த விலைவாசி உயர்வுக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.
You must be logged in to post a comment Login