செய்திகள்
வர்த்தமானி அடிக்க கூட காகிதம் இல்லை – இலங்கையில் பரிதாபம்!!
அரசாங்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அச்சடிப்பு தாள்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சிலகாலமாக தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமை திணைக்களத்தின் அச்சு நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளதாக தெரியவருகின்றது.
அரசாங்க அச்சகத் திணைக்கள அதிகாரிகள் கூறும்போது, ஆறு மாதங்களுக்குப் போதுமான அச்சுத் தாள் மட்டுமே உள்ளது.
இது தொடர்பில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் டொலர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அச்சடிக்கும் காகிதம் கிடைக்காவிட்டால், அச்சிடுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் அச்சடிக்கும் காகிதத்தை பாதுகாப்பாக பயன்படுத்துமாறு அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊழியர்கள் பலர் கொவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் கொவிட் நோயாளர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login