செய்திகள்
மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும்! – அங்கஜன் இராமநாதன்
பலாலி விமான நிலையத்துக்கு செல்வதற்கான பாதையை விடுவிக்க வேண்டிய தேவை காரணமாகவே கட்டுவன் – மயிலிட்டி வீதி முதற்கட்டமாக விடுவிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்படவுள்ள 400 மீற்றர் வீதியை பார்வையிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும். அதன்படி பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப செயற்பாடாக இவ் வீதி விடுவிப்பை கருதவேண்டியது அவசியமானதாகும்.
பல்வேறு தரப்புக்களின் கோரிக்கை முயற்சிகளினால் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இதனை செய்ய முடிந்தது.
இந்த அரசாங்கத்தின் மூலம் காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதை எவ்வளவு செய்ய முடியுமோ அதனை நாம் செய்வோம்.
வலி. வடக்கில் மூன்று கட்டங்களாக காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தினருடன் பேச ஜனாதிபதி ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் நடைபெறும் – என்றார்.
You must be logged in to post a comment Login