செய்திகள்
வைகுண்ட வாசல் தரிசனம் – 10 நாட்களில் ரூ.26.6 கோடி காணிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 13-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு ஏழுமலையான் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்று வந்தனர்.
அனைத்து பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக குறித்த 10 நாட்களும் தரிசனம் செய்யும் வகையில், அனுமதி வழங்கப்பட்டிருந்தது, இதன்படி ஒன்லைன் டிக்கெட் மூலம் 300 ரூபா செலுத்தி 10 ஆயிரம் பக்தர்களும், ஒன்லைன் இலவச அனுமதியில் 12 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுக்கள் படி 50 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், சொர்க்க வாசல் தரிசனம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதேவேளை, தற்போது ஏழுமலையான் உண்டியல் காணிக்கை தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் வைகுண்ட வாசல் வழியாக 3 லட்சத்து 77 ஆயிரத்து 943 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், ரூ.26.6 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் திருப்பதிக்கு அழைத்துவரப்பட்டு இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தங்குமிடம், லட்டு, பிரசாதம் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
You must be logged in to post a comment Login