செய்திகள்
சம்பந்தன் இராஜினாமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைப்பெற்றுவரும் அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவை எடுக்கக்கூடும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்த விடயம் பரீசிலனை மட்டத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகின்றது.
அதேவேளை, ” இரா. சம்பந்தன் எம்.பி. நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுக்கமாட்டார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு சபை அமர்வில் பங்கேற்காவிட்டால்தான் எம்.பி. பதவி தானாக வலுவிழந்துவிடும். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கும் பிரேரணையை முன்வைக்க முடியும். அவ்வாறு செய்தால் தொடர்ச்சியாக விடுமுறை பெறமுடியும். எம்.பி. பதவியும் பாதுகாக்கப்படும்.
புதிய அரசியலமைப்புக்கான பணிகள் உட்பட முக்கியமான இந்த கால கட்டத்தில் சம்பந்தனின் வகிபாகம் அவசியம்.” – என தமிழரசுக்கட்சி பிரமுகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login