செய்திகள்
நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைப்புக்கான காரணத்தை வெளியிட்ட எதிர்க்கட்சி
‘கோப்’ மற்றும் ‘கோபா’ குழுக்களின் தலைமைப்பதவிகளை மாற்றியமைக்கவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறியவை வருமாறு,
“அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றின் தலைமைப்பதவியை ஆளுங்கட்சியினரே வகிக்கின்றனர். அவர்கள் மிகவும் சிறப்பாக செயற்படுகின்றனர். அரச நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் அம்பலமாகின்றன.
இதனால் தான் மேற்படி குழுக்களை கலைத்து புதியவர்களை நியமிக்கும் நோக்கில் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால், புதிய அமர்வு ஆரம்பமாகும்போது புதிய தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.” – என்றார்.
You must be logged in to post a comment Login