செய்திகள்
ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதைத் தடுக்க வேண்டும்
ஆயர்கள் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதை தடுக்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை இதோ;
இவ்வருடம், வடக்கு, கிழக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள “மதம் கலந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் ஊடக அழைப்பு, விடுதலை அரசியல் செயற்பாட்டு தேச சிந்தனைகளை தகர்த்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, அறிவுக்கு வித்திட்டு, அரசியல் இலாபம் தேடும் ஞானசார தேரரின் இன்னும் ஒரு வடிவமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே தமது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழர்களை அடக்கி அவர்களின் அரசியல் பூண்டோடு தகர்த்து விட்டோம்” என வருடந்தோறும் வெற்றி விழா எடுப்பவர்கள்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத சிந்தனையை கொம்பு சீவி அவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டனர்.
இதில் ஞானசார தேரரின் பங்கு மிக அதிகமானது எனவும் அதில் அரசியல் குளிர்காய்ந்ததோ வேறு சிலர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“இவர்களின் அடிவருடிகளுக்கு, வடக்கு, கிழக்கில் உள்ள இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து உள்ளக வன்முறையை தூண்டிவிடும் நோக்கமும் உள்ளது.
தேச விடுதலை அரசியல் செயற்பாட்டு பயணத்தை சிதைக்க வேண்டும் என்பதே, இதன் உள்நோக்கமாகும்.
இதற்காக முன்னெடுத்த முயற்சிகளில் தோல்வி கண்ட நிலையில் தமிழர்களின் உயிரோடு கலந்த மாவீரர் வாரத்தில் கைவைத்து விட்டனரோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.
“அண்மையில், ஞானசார தேரர் மடு பிரதேசத்தில் மக்களின் காணிப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி சென்றபோது அவர் வரும் வழியில் மலர் தூவி வரவேற்றனர். இது, மதங்களுக்கிடையிலான முரண்பாட்டை மலர் தூவி வரவேற்பதற்கு ஒப்பாகும்.
அதனைத் தொடர்ந்தே, ஆயர்கள், மதம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் என்று தனித்து முடிவெடுத்து, அதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். இது ஞானசார தேரரின் இன்னுமொரு முகமாகவே தோற்றமளிக்கின்றது.
” எனவே, வடக்கு, கிழக்கு ஆயர்கள், வெளி சக்திகளின் அரசியல் தேவைகளுக்கு இடமளிக்காது, ஊடக அறிக்கை அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனை, அரசியல் ரீதியான உளவியல் தாக்கம், மாவீரர்களுடைய குடும்பத்தினரின் கவலை என்பவற்றை கருத்திற்கொண்டு, மக்களின் குரலுக்கு செவிமடுத்து மக்களோடு பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login