செய்திகள்
வடக்கில் கொவிட் நிலவரம்!!
வட மாகாணத்தில் புதிதாக இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் தற்போது வெகுவாக குறைவடைந்து வருகின்றன என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாகாணத்தில் கொவிட் தொற்று ஏற்பட்ட ஆரம்பகாலம் முதல் இன்று வரை 38 ஆயிரத்து 850 நோயாளர்கள் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஆகக்கூடிய தொற்றாளர்கள் இவ் வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 135 பேர் இனங்காணப்பட்டனர்.
செப்ரெம்பர் மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 527ஆகக் குறைவடைந்து இவ் வருடம் ஒக்டோபர் மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 612ஆக வெகுவாக குறைவடைந்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் யாழ். மாவட்டத்தில் 865 நோயாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 703 நோயாளர்களும், கிளிநெர்சி மாவட்டத்தில் 654 நோயாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 273 நோயாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் இதுவரை கொவிட் தொற்றினால் 833 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 231 இறப்புக்களும் செப்ரெம்பர் மாதத்தில் ஆகக் கூடிய இறப்புக்களாக 350 இறப்புக்களும் பதிவுசெய்யப்பட்டன.
இதன்பின் ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து 71 இறப்புக்கள் மட்டும் பதிவுசெய்யப்பட்டன. இதில் 44 இறப்புக்கள் யாழ். மாவட்டத்தில் இருந்தும், 14 இறப்புக்கள் வவுனியா மாவட்டத்தில் இருந்தும, 9 இறப்புக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தும், 4 இறப்புக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தும் பதிவு செய்யப்பட்டன.
கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து ஏற்றல் திட்டம் வடமாகாணத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வட மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 978 பேருக்கு முதலாவது தடுப்பூசியும், 4 லட்சத்து 91 ஆயிரத்து 509 பேருக்கு 2வது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் 20 – 29 வரையான வயதினருக்கு ஒரு லட்சத்து 18 லட்சத்து 965 பேருக்கு முதலாவது தடுப்பூசியும், 47 ஆயிரத்து 961 பேருக்கு 2வது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களில் 16 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி இதுவரை 46 ஆயிரத்து 981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் முதல் 2 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூூசி வழங்கும் பணிகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிலும் முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு வடமாகாணத்தில் இத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. 2வது தடுப்பூசி பெற்றுக்கொண்டதிலிருந்து 6 மாதத்தின் பின்னர் 3வது தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. – என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login