செய்திகள்
புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கவில்லை! – தயாசிறி ஜயசேகர
” நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ‘மக்கள் சபை’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“எதற்காக இந்த அவசர கூட்டம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலர் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர். ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசை உருவாக்கவோ நாம் அணி திரளவில்லை. மாறாக மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாப்பதற்காகவே சமராடுகின்றோம்.
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பது திரைசேரி செயலாளரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அதற்கான திருத்தங்களை முன்வைப்போம். பழைய முறையில் செல்வதற்கு அனுமதிக்கமாட்டோம்.
தேசிய முக்கியத்துவம்மிக்க வளங்கள் அரசு வசம் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.”- என்றார்.
You must be logged in to post a comment Login