செய்திகள்
குருநகர் மீனவர் மீது இந்திய படகு தாக்குதல்!
இலங்கை கடற்தீவில், இந்திய இழுவைப் படகு, குருநகர் படகு மீது மோதியதுடன், படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடிப் படகு, குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, அப்படகில் வந்தவர்கள், மற்றைய படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை கற்கடதீவு கடல் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர், இலங்கை மீன்பிடிப் படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த மூவரையும் தாக்கி கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனால் குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு, குருநகர் மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login