பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் (Adiala Jail) உயிரிழந்துவிட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் (Khurram Zeeshan) பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இம்ரான் கான் உயிருடன் இருக்கிறார் என்றும், அவரை வெளிநாடு தப்பிச் செல்லும்படி பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“இம்ரான் கான் அடிலா சிறையில் உயிரோடு இருப்பதாக எங்களுக்கு பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது,” என்று செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தெரிவித்துள்ளார்.
“அவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறி, அவருக்குப் பிடித்தமான இடத்தில் அமைதியாக இருக்கும்படி பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு இம்ரான் கான் ஒத்துக் கொள்ள மாட்டார்,” என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இம்ரான் கானைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது மனித உரிமை மீறல் என்றும் அவர் சாடியுள்ளார்.
சந்திப்பு அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது சகோதரிகள் சிறை வாசலில் போராட்டம் நடத்தினர். இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.
“இம்ரான் கானின் புகழைக் கண்டு பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. அதனால்தான் அவரது படம் மற்றும் வீடியோ வெளியிட அவர்கள் அனுமதிக்கவில்லை,” என்று குர்ராம் ஜீஷன் குற்றம் சாட்டினார். இம்ரான் கான் சிறையில் இருக்கும் படம் வெளியானால், அது மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்ரான் கான் சிறையில் இருந்தாலும், அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பிடிஐ கட்சி பாகிஸ்தான் இளைஞர்களிடம் வலுவாக வேரூன்றியுள்ளது என்றும் செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.