சினிமா

மரணிப்பதற்கு முன்னர் இருவரை வாழ வைத்த பெண்: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Published

on

மரணிப்பதற்கு முன்னர் இருவரை வாழ வைத்த பெண்: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தமையினால் இருவர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை – லுனம நோனகம ஹெல்பேஜ் வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சுசாந்தா (57) என்ற தாயே தனது இரு சிறுநீரகங்களையும் மேலும் இருவருக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இவரது மூளைக்குள் விஷக்கிருமி நுழைந்தமையினால் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதற்கமைய, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அமைய இரண்டு சிறுநீரகங்களும் இருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் டொக்டர் ஹிருஷிகா டி சில்வா, டொக்டர் மகேஷ் பிரியந்த, பிசியோதெரபிஸ்ட் கசுன் பிரபாசர மற்றும் நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் நிரோஷன் செனவிரத்ன, அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் ஊழியர்கள் இணைந்து சத்திரசிகிச்சையினை வெற்றிகரமாக முன்னெடுத்து இருவரை வாழ வைத்துள்ளனர்.

இலங்கையில் அதிகளவான நோயாளர்கள் உடல் உறுப்புகள் செயலிழந்து பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், உடல் உறுப்புகளைப் பெறுவது இலகுவான காரியமல்ல எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து எடுக்கப்படும் உறுப்புகள் எட்டு நோயாளிகளை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பதால், நோயாளியின் குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version