சினிமா

மெய்யழகன் திரைவிமர்சனம்

Published

on

96 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரேம் குமார். இவர் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தின் தலைப்பில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது.

மேலும் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த கூட்டணியில் மெய்யழகன் எப்படி வந்திருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

தஞ்சாவூரை சேர்ந்த அரவிந்த் சாமியின் (அருள்மொழி) தனது சொந்த வீடு அவருடைய குடும்பத்தின் கையை விட்டு போகிறது. சொந்த வீட்டை பிரிந்து அதே ஊரில் இருக்க முடியாத என்பதால், சென்னைக்கு வருகிறார்கள்.

20 ஆண்டுகள் இப்படியே செல்ல, தனது தங்கையின் திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூருக்கு செல்கிறார் அரவிந்த் சாமி. மனதில் சிறு தயக்கத்துடன் செல்லும் அரவிந்த் சாமிக்கு, உறவினராக வருகிறார் கார்த்தி.

அத்தான் அத்தான் என அரவிந்த் சாமியை உரிமையோடு கார்த்தி அழைத்தாலும், கார்த்தி யார்? அவருடைய பெயர் என்ன என்று தெரியாமல் நிற்கிறார் அரவிந்த் சாமி. இந்த கட்டத்தில் சென்னையில் இரவு பேருந்தில் கிளம்ப முடிவு செய்யும் அரவிந்த் சாமி, சென்னை போகும் கடைசி பேருந்தையும் தவறவிட்டு விடுகிறார்.

சென்னைக்கு செல்லவிருந்த கடைசி பேருந்தை தவற விட்ட அரவிந்த் சாமியின் வாழ்க்கையில் அன்று ஓர் இரவில் நடந்த மாற்றங்கள் என்னென்ன? அதன்பின் என்ன நடந்தது என்பது படத்தின் மீதி கதை.

கதை முழுக்கு முழுக்க அரவிந்த் சாமியின் வாழ்க்கையுடன் பயணிக்கிறது. எமோஷனலான நடிப்பு, தயக்கத்தை காட்டும் விதம், பாசம், குற்ற உணர்ச்சி என அனைத்து இடங்களிலும் பட்டையை கிளப்பியுள்ளார் அரவிந்த்சாமி.

அரவிந்த் சாமியின் நடிப்பு ஒரு புறம் படத்தை கொண்டு செல்கிறது என்றால், மறுபுறம் நான் இருக்கிறேன் என நடிப்பில் அசத்திவிட்டார் கார்த்தி. எவ்வளவு வயதானாலும், மனதளவில் இன்னும் சிறு பிள்ளைகள் போலவே இருக்கும் நபர் போல் கார்த்தி நடித்துள்ள நடிப்பு அருமை.

என்ட்ரி கொடுத்ததில் இருந்து கார்த்தி பேசும் விஷயங்கள் நம்மை அரவிந்த் சாமி மற்றும் கார்த்தி இருவருடன் பயணிக்க வைக்கிறது. உடல் மொழியிலும் சரி, வசனங்களிலும் சரி எங்குமே நமக்கு கார்த்தி தெரியவில்லை, அந்த கதாபாத்திரம் தான் நம் கண்ணனுக்கு தெரிகிறது.

தொய்வு என்பதே படத்தில் இல்லை. வசனங்களிலேயே படம் செல்வது புதிய திரை அனுபவத்தை கொடுக்கிறது. அதை தைரியமாக செய்ததற்கு இயக்குனர் பிரேம் குமாருக்கு பாராட்டுக்கள். பல நாட்கள் கழித்து சண்டை, கத்தி, துப்பாக்கி சந்தம் இல்லாமல் அமைதியாக ஒரு படத்தை பார்த்த உணர்வை கொடுத்ததற்கு இயக்குனருக்கு மிக்க நன்றி.

அரவிந்த் சாமி மற்றும் கார்த்தி இருவருடைய கதாபாத்திரம் தான் மொத்த படமும். மற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும் அழகு. அதில் எந்த குறையும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சாமி ஏக்கத்தை காட்டிய விதமும் மனதை தொடுகிறது.

அரவிந்த்சாமி கதாபாத்திரம் வேண்டாம் என கூறிய ஒரு விஷயம், கார்த்தியின் வாழ்க்கையை மாற்றியதை காட்சியாக அமைத்த விதம் சூப்பர். அதே போல் தமிழர்களின் முன்னோர்கள் குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசிய விதம், அதேபோல் ஜல்லிக்கட்டு குறித்து காட்டிய காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்தது.

ஒவ்வொரு இடத்திலும் அரவிந்த் சாமியிடம் கார்த்தி பேசும் விஷயங்கள் நம்மை அப்படியே அவர்கள் இருவருடன் அழைத்து செல்கிறது. இதை திரைக்கதையில் தொய்வு இல்லாமல் வடிவமைத்தது மிகப்பெரிய விஷயம். அதற்கு பாராட்டுக்கள்.

Exit mobile version