உலகம்
நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது நாசாவின் ஓரியன் விண்கலம்
நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள அமெரிக்கா விண்வெளி கழகமான நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சோதனை முயற்சியாக ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
மனிதர்கள் இல்லாமல் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதை அருகே சென்றது. விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்துக்கு பிறகு நிலவின் சுற்று பாதையில் நிலைநிறுத்த அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் இயக்கினர்.
இந்த நிலையில் ஓரியன் விண்கலம் வெற்றி கரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப் பட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும் வீடியோவையும் நாசா வெளியிட்டு உள்ளது. 25 நாட்களுக்கும் மேலான பயணத்துக்கு பிறகு ஓரியன் விண்கலத்தை வருகிற டிசம்பர் 11ம் திகதி பசிபிக் பெருங்கடலில் தரையிறக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த சோதனை முயற்சி வெற்றி, என்பது ஆர்டெமிஸ்-2 பணியின் செயல்பாட்டை தீர்மானிக்கும். இது விண்வெளி வீரர்களை தரையிரங்காமல் நிலவை சுற்றி அழைத்து செல்லும்.
இறுதியாக ஆர்டெமிஸ்-3 திட்டத்தில் மனிதர்கள் நிலவில் இறங்கி பூமிக்கு திரும்பும் திட்டம் தொடங்கப்படும். இந்த பணிகள் முறையே 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login