கட்டுரை
நீதிக்கான பயணத்தில் பேராயரின் துணிச்சல்!
இலங்கையின் நீதி முறைமை குறித்து சில விடயங்களை ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் அம்பலப்படுத்தியிருக்கின்றார் கொழும்புக்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.
ஜெனிவா அமர்வில் Transition International என்ற அமைப்பின் சார்பாக நேற்று உரையாற்றிய பேராயர் மெல்கம் ரஞ்சித், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் நீதி விசாரணைகள் நடைபெறாமையை ஒட்டி விசனம் தெரிவித்தமையோடு, முக்கியமான இரண்டு விடயங்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவை கவனிக்கத்தக்கவை.
ஒன்று – இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தபோது, இது, சில இஸ்லாமியத் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.
ஆனால், அதன் பின்னரான விசாரணைகள் ஒரு பெரிய அரசியல் சதி வலையின் பகுதியே இது என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றன எனப் பேராயர் குறிப்பிடுகின்றார்.
அடுத்தது – ஈஸ்டர் ஞாயிறுக் குண்டுத் தாக்குதலின் பின்னால் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிப்படுத்துவதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை கவுன்ஸிலும், அதன் அங்கத்துவ நாடுகளும் ஆதரித்து அதன் மூலம் ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்.
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நீதித் தேடும் முயற்சியில் பேராயரின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகின்றது.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் வெறுமனே சில இஸ்லாமிய தீவிரவாத சக்திகளின் நடவடிக்கை என்ற தோற்றத்திலும், அது பற்றிய முற்கூட்டிய எச்சரிக்கைத் தகவல்கள் வந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்டோர் அசிரத்தையாக இருந்து தவறிழைத்தனர் என்ற சாரப்படவுமே இதுவரை கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
ஆனால், அந்தத் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதியின் ஒரு பகுதி மட்டுமே என்ற உண்மையைப் பேராயர் ஜெனிவாவில் நின்று அம்பலப்படுத்தியிருக்கின்றார். அந்த அரசியல் சதி வலை யாது என்பதுதான் இனி நோக்கப்பட வேண்டும்.
அடுத்து, இலங்கை தொடர்பில், சாட்சியங்களைத் தொடர்ந்து சேகரிப்பதற்காக கடந்த வருடத் தீர்மானம் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஆரம்பித்திருக்கும் பொறிமுறையை கவுன்ஸிலும், கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தமை மூலம், அந்தப் பொறிமுறைக்கு ஆதரவு தந்திருக்கின்றார் பேராயர்.
இந்தப் பொறிமுறை ஊடாகவேனும், யுத்த காலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலமாகாவா என்று தமிழர்கள் ஏங்கிக் கொண்டிருக்கையில் அந்தப் பொறிமுறைக்கு எதிரான உணர்வலைகளை இலங்கையின் பெளத்த, சிங்கள ஆட்சிப்பீடம் கடுமையாக முன்வைத்திருந்தது.
இந்தச் சாட்சியங்கள் சேகரிப்புத் திட்டம் நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் தீர்வுகளுக்குக் குந்தகம் என்ற சாரப்பட ஜெனிவாவில் இலங்கையின் தலைமைப் பிரதிநிதி நீதியமைச்சர் பேராசிரியர் பீரிஸ் உரை நிகழ்த்தி, சில தினங்களில் அதே சாட்சியங்கள் சேகரிப்புத் திட்டத்துக்கு சர்வதேசத்தின் முழு ஆதரவை அதே மன்றில் நின்று பகிரங்கமாகக் கோரியிருக்கின்றார் பேராயர்.
இலங்கை ஆட்சிப் பீடத்தின் முகத்திரையை ஜெனிவாவில் கிழித்தெறிந்திருக்கின்றார் பேராயர்.
இலங்கையின் சட்டமுறைமைகளுக்கு அமைய நீதி, நியாயம் கிடைக்காது, பொறுப்புக்கூறல் நிலை நிறுத்தப்படமாட்டாது என்ற தமிழர்களின் கருத்தைச் சரியான நிலைப்பாடு என உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது பேராயரின் உரை.
– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (காலைப்பதிப்பு – 08.03.2022)
You must be logged in to post a comment Login